கள்ளக்குறிச்சி, மார்ச் 8: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கவரை தெரு பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் தனது பேரக் குழந்தை படிக்கும் தனியார் பள்ளிக்கு நேற்று காலையில் பேரக் குழந்தையை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு பின்னர் தனது மனைவி மனோரஞ்சிதத்தை (58) ஏமப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பைக்கில் அழைத்து சென்று கொண்டு இருந்தார். கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி கண்ணிைமக்கும் நேரத்தில் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தடுமாறி கீழே விழுந்ததில் மனோரஞ்சிதம் தலையில் பலத்த அடிபட்டு ரத்த காயத்துடன் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்துள்ளார்.
இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அந்த சாலை வழியாக வந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.உடனடியாக கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் பரிமளா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மனோரஞ்சிதத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மனோரஞ்சிதம் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் கள்ளக்குறிச்சி வஉசி நகர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் கண்ணெதிரே சாலை விபத்தில் மனைவி இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post கள்ளக்குறிச்சியில் பைக் மீது டிப்பர் லாரி மோதி கணவன் கண்ணெதிரே மனைவி பலி appeared first on Dinakaran.