உளுந்தூர்பேட்டை அருகே விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி மருத்துவ பணியாளர் உள்பட 3 பேர் படுகாயம்

 

உளுந்தூர்பேட்டை, மார்ச் 11: கள்ளக்குறிச்சி அருகே விறகு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் மருத்துவ பணியாளர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (27). இவர் குடும்ப பிரச்னை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

நேற்று காலை செல்வகுமாரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற செல்வகுமார் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். இந்த ஆம்புலன்சை செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (42) என்பவர் ஓட்டிச் சென்றார். 108 ஆம்புலன்ஸ் உளுந்தூர்பேட்டையை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் விறகு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் வேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் மேல் சிகிச்சைக்கு சென்ற செல்வகுமார், அவரது தாயார் மற்றும் மருத்துவ பணியாளர் காயத்ரி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மற்றும் சாலையில் விறகு கட்டைகள் சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களையும், விறகுகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இவ்விபத்தால் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post உளுந்தூர்பேட்டை அருகே விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி மருத்துவ பணியாளர் உள்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: