தம்பதி உள்பட 3 பேர் மீது தாக்குதல் தந்தை கைது: 2 மகன்களுக்கு வலை மாடு மேய்ந்த தகராறில்

செய்யாறு, மார்ச் 5: செய்யாறு அருகே பயிர்களை மாடு மேய்ந்த தகராறில் தம்பதி உள்பட 3 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது 2 மகன்களை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(55), விவசாயி. இவரது மகன் ரஜினி(33). அதே கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(50), விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலக்கண்ணன் வளர்த்து வரும் மாடு, ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த பயிர்களை மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2ம்தேதி இரவு ராதாகிருஷ்ணன் மதுபோதையில், கமலக்கண்ணன் வீட்டிற்கு சென்று மாடு மேய்ந்தது தொடர்பாக அவரிடம் தகராறு செய்தாராம்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், கமலக்கண்ணனை சரமாரி தாக்கினாராம். இதை தடுக்க முயன்ற கமலக்கண்ணனின் மனைவி வேண்டா(50), மகன் ரஜினி(33) ஆகியோரும் தாக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணனின் மகன்கள் விஜயக்குமார், விஜயகாந்த் ஆகியோரும் தந்தைக்கு ஆதரவாக கமலக்கண்ணன், வேண்டா, ரஜினி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் படுகாயம் அடைந்த கமலக்கண்ணன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ரஜினி பிரம்மதேசம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபா வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமார், விஜயகாந்த் ஆகியோரை தேடி வருகிறார்.

The post தம்பதி உள்பட 3 பேர் மீது தாக்குதல் தந்தை கைது: 2 மகன்களுக்கு வலை மாடு மேய்ந்த தகராறில் appeared first on Dinakaran.

Related Stories: