பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பா.ஜ.க. நிர்வாகிகள்; நடவடிக்கை எடுக்கக்கோரி சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு..!!

சென்னை: பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக புகார் எழுந்துள்ளது.

பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் தராத பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்:

தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக பல இடங்களில் பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியவர்களுக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் பணம் தராமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. பா.ஜ.க. பூத் ஏஜெண்டுகளாக பணியாற்றிய டீக்காராம், வெங்கட், மாரியம்மாள் உள்ளிட்ட 5 பேருக்கு பணம் தரவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தென் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் முத்துமாணிக்கம், பணம் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பணம் தராதது தொர்பாக கடந்த 20-ம் தேதி மேட்டுக்குப்பத்தில் பா.ஜ.க. மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பணம் கிடைக்காத பூத் ஏஜெண்டுகளான டீக்காராம், வெங்கட் உள்ளிட்டோர் முத்துமாணிக்கத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துமாணிக்கம் புகாரின்பேரில் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 3 பேரை பிடித்து போலீசார் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, துரைப்பாக்கத்தில் பா.ஜ.க.வினரிடையே நடந்த மோதலின் பின்னணியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் முத்துமாணிக்கம் மீது புகார் அளித்த டீக்காராம், தமிழிசையின் ஆதரவாளர் ஆவார். புகாருக்குள்ளான முத்துமாணிக்கம், பா.ஜ.க. நிர்வாகியின் கரு.நாகராஜனின் ஆதரவாளர் என தகவல் வெளியாகியுள்ளது. கரு.நாகராஜனின் தூண்டுதல் பேரிலேயே டீக்காராம் உள்ளிட்டோரை போலீசார் பிடித்து விசாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருமங்கலத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்:

மதுரை: திருமங்கலத்தில் பாஜக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை கண்டித்து, அக்கட்சியினரே சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூத் ஏஜெண்டுகளுக்கான ரூ.40 லட்சம் – பா.ஜ.க. நிர்வாகிகள் சுருட்டியதாக புகார்:

பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் திருமங்கலம் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். பூத் ஏஜெண்டு நிதியில் கையாடல் செய்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

The post பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பா.ஜ.க. நிர்வாகிகள்; நடவடிக்கை எடுக்கக்கோரி சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: