அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் முரண்பாடுகள் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணத்திற்கும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.  சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரியிருந்தார்.

அதை ஏற்று கடந்த 22ம் தேதி வங்கி தொடர்பான அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் நேரில் வழங்கப்பட்டன. இதையடுத்து, நீதிபதி எஸ்.அல்லி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணத்திற்கும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளது. காசோலை, செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அதனை நிபுணர் குழுவின் ஆய்வுக்கோ அல்லது தடயவியல் சோதனைக்கோ உட்படுத்த வேண்டும் என்று வாதிட்டார். அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ஆவணங்களில் எந்த வேறுபாடும் இல்லை. ஆவணங்களை திருத்தவும் இல்லை என்றார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கில் வரும் 30ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

* மறு ஆய்வு மனு மீது விசாரணை தள்ளிவைப்பு
எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் முரண்பாடுகள் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: