சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்

சேலம்: சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்கும் வகையில், தியாகிகள் நினைவு சின்னம் கல்லில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலரால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக, சேலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வெப்பக்காற்றில் சிக்கி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சமூக ஆர்வலரான கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி பிரபாகரன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, ரோட்டில் முட்டை பொறிக்கும் நிகழ்வை நடத்திக் காட்டினார். பின்னர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் உள்ள கல்லில், அவர் முட்டையை உடைத்து ஊற்றினார். வெயிலின் கொடுமையில் அது ஆப்பாயிலாக மாறிக்கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், தியாகிகள் நினைவு ஸ்தூபியில் ஆப்பாயில் போடலாமா? என்று கேள்வி எழுப்பியதுடன், ஆம்லெட் போட்ட பிரபாகரனையும், அவரது நண்பரையும் ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, சமூக ஆர்வலர் பிரபாகரன், பொதுமக்கள் வெளியே வந்து வெயிலினால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில், ரோட்டில் ஆப்பாயில் போட முடிவு செய்தேன். தெரியாமல் தியாகிகள் நினைவு தூபியில் ஆம்லெட் போட்டு விட்டேன். இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன்’ என்றார். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், பின்னர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: