மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்

காங்கயம்: வெள்ளகோவிலில் கோவில் திருவிழாவுக்கு வந்த கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில் உள்ள வீரக்குமாரசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். கடந்த மாதம் மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த கோயிலின் தேர்த்திருவிழா மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் இசை கச்சேரி நடைபெற்றது.

இந்த கச்சேரியை பார்ப்பதற்காக 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் வந்துள்ளார். அப்போது கூட்டத்தில், மாணவி திடீரென மாயமானார். இதையறிந்த மாணவியின் தாயார் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். எங்கும் கிடைக்காததால் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், 11ம் தேதி அதிகாலை மாணவி வீட்டிற்கு வந்துள்ளார். அவர், தனது தாயாரிடம் பலர் என்னை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ஓட்டல் தொழிலாளிகளான வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29), காமராஜர்புரத்தை சேர்ந்த பிரபாகர் (32), மூலனூர் தொட்டம்பாளையம் தினேஷ் (27), பாலசுப்பிரமணி (30), வெள்ளகோவில் ஏபிபுதூர் நவீன்குமார் (26), வெள்ளகோவில் மயில்ரங்கம் நந்தகுமார் (30), வெள்ளக்கோவில் பாரதிநகர் தமிழ்செல்வன் (28), வெள்ளக்கோவில் சிவநாதபுரம் மோகன்குமார் (23) ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதான தினேஷ் அதிமுக நிர்வாகி. இவரது தந்தை அதிமுக கிளை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்கண்ட 8 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு திருப்பூர் எஸ்பி அபிஷேக் குப்தா பரிந்துரை செய்தார். தொடர்ந்து 8 பேரையும் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்துள்ளனர்.

The post மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: