காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்

ராசிபுரம்: தகாத உறவு காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நெ.3.குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (46), கூலி தொழிலாளி. இவருக்கு செல்வி (36) என்ற மனைவியும், 17 வயதில் மகனும் உள்ளனர்.

பழனிவேல் கடந்த 2ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், அன்று மதியம் 12 மணியளவில் ஆயிபாளையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பழனிவேலின் மனைவி செல்விக்கும், ஊராட்சி மன்ற தலைவரான அதிமுகவைச் சேர்ந்த கந்தசாமி (45) என்பவருக்கும் இடையே, தகாத உறவு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தகாத உறவு காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை செல்வி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். செல்வி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கொலையுண்ட பழனிவேலுவுக்கும், செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியிடம் முறையிட்டுள்ளார்.

கணவன்-மனைவியிடையே சமரசம் பேசுவதற்காக, கந்தசாமி அடிக்கடி பழனிவேலுவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, அவருக்கும், செல்விக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பழனிவேலு, இருவரையும் கண்டித்துள்ளார்.

இதையடுத்து, கணவனை கொலை செய்ய செல்வி முடிவு செய்து, தனது காதலன் கந்தசாமியிடம் கூறியுள்ளார். அதன்படி, கந்தசாமி சேலம் நெத்திமேடு காமராஜர் நகர் கே.பி.கரடு பகுதியைச் சேர்ந்த ரவி (எ) குணா (48) என்பவரோடு கடந்த 2ம் தேதி ஆயிபாளையம் அருகே உள்ள ரயில்வே பாலத்திற்கு வந்தார். அங்கிருந்து பழனிவேலுவை அழைத்து அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, சடலத்தை அங்கேயே போட்டு விட்டு, இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கந்தசாமியுடன் சேர்ந்து பழனிவேலை கொலை செய்த ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர் appeared first on Dinakaran.

Related Stories: