பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை

திருச்சி: கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்த நபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்புடைய மற்றொரு நபரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சியை சேர்ந்த 14வயது சிறுமி, திருச்சியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி பெற்றோரிடம் சண்டையிட்டதால் கோபித்து கொண்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறி திருச்சி அருகே உள்ள கல்லணைக்கு பஸ்சில் சென்றுள்ளார். தொடர்ந்து இரவு நேரமானதால், அங்கிருந்து பஸ்சில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அங்கு ஒரு நபர், சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து, சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்து கொண்ட அந்த நபர், சிறுமியை கோவைக்கு அழைத்து சென்றார். அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து, திருச்சிக்கு வந்த சிறுமி வீட்டிற்கு செல்ல விரும்பாத சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து பஸ்சில் மணப்பாறை சென்றார். அங்கு வந்திறங்கிய சிறுமியிடம், அருகில் இருந்த நபர் ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார்.

சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியை உறவினர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, சிறுமிக்கு உடைகள், செருப்பு ஆகியவற்றை அந்த நபர் வாங்கி கொடுத்தார். பின்னர், சிறுமியை லாட்ஜ்க்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே, சிறுமி மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து திருச்சி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், திருச்சியில் மாயமான சிறுமி மணப்பாறை வந்ததும், அங்கிருந்து சிறுமியை ஒருவர் அழைத்து சென்றதையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, லாட்ஜில் இருந்த அந்த சிறுமியை நேற்று முன்தினம் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுதொடர்பாக சிறுமியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் மணப்பாறைய சேர்ந்த முல்லை முருகேசன்(45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை கோவைக்கு அழைத்து சென்ற அந்த நபர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: