கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை

*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கயத்தாறு : கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவர் அபுதாபியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (40). இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வில்லிசேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சுந்தரி மற்றும் அவரது குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க மரக்கதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டின் உள் அறையில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரி இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை பிரிவு நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வில்லிசேரி கிராமத்தில் குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியில் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

The post கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: