உடுமலை, ஜூலை 16: உடுமலை கால்வாய் கரையோரம் தார் சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உடுமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குரல்குட்டை வடக்கு கிளை செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.தெற்கு கிளைச் செயலாளர் செந்தில்குமார், மாதர் சங்க கிளை செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நோக்கங்களை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், குரல்குட்டை கனகராஜ் ஆகியோர் பேசினர். உடுமலை வாய்க்கால் பாலத்தில் இருந்து எலையமுத்தூர் ரோடு, எலையமுத்தூர் பிரிவு, தளி ரோடு, வழியாக உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. உடுமலை கால்வாய் கரையோரம் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயனிடம் மனு அளித்தனர்.
