அவிநாசி, ஜூலை 14: அவிநாசி அருகே சேவூரில் 12ம் நூற்றாண்டு பழமையான தெப்பக்குளத்தில் சீரமைக்கும் தொடங்கப்பட்டது. பனிரெண்டாம் நூற்றாண்டில் கொங்குச் சோழரான முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட சேவூர் கபாலீசுவரர் கோயில் முக்கியமான சைவத்திருத்தலம் ஆகும். இக்கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு இன்றி ஏராளமான புதர்கள் மண்டி காணப்பட்டது. இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தை பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் முயற்சியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக தெப்பக்குளத்தை சூழ்ந்திருந்த முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளே முளைத்திருந்த மர வேர்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பழுதடைந்துள்ள நீராழி மண்டபம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு படிக்கரை, சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படப்படவுள்ளது.
