திருப்பூர்,ஜூலை13: திருப்பூரின் அரிசிக்கடை வீதியில் நேற்று குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக, அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், பெரிய கடைவீதி மற்றும் காங்கயம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து ஈஸ்வரன் கோயில் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சாலை அடைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
குறுகலான மாற்றுப் பாதைகளில் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் திரும்பியதால் அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வணிக வளாகங்கள் நிறைந்த இப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் திடீர் போக்குவரத்து மாற்றத்தால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, இது போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் போது முன்னரே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
