பரமக்குடி: பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை விடுவிக்க ரூ.27,000 லஞ்சம் பெற்றது தொடர்பாக அலுவலக பெண் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த 19ம் தேதி பதிவு செய்யப்பட்ட விடுதலைப் பத்திரங்களை விடுவிப்பதற்காக ஒருவரிடம் ரூ.30,000 லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் ரூ.27,000-ஆக குறைத்துக்கேட்டதாக புகார் பெறப்பட்டது.
இதன்பேரில், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை நேரில் விசாரணை மேற்கொண்டனர். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட மகாலட்சுமியின் உத்தரவின்பேரில், அருகே உள்ள தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் சிக்கந்தர் என்பவர் ரூ.27,000 லஞ்ச பணத்தை பெற்றது தெரிய வந்தது. அவரிடம் இருந்து லஞ்ச பணம் முழுவதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அலுவலக உதவியாளர் மகாலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
