ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி, சிறுமிக்கு முதியவர், தொழிலாளி பாலியல் தொல்லை: பள்ளியில் பிளஸ் 1 மாணவிக்கு டார்ச்சர்

 

நெல்லை: கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நெல்லை மாணவி (19) பொறியியல் படித்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி இரவு கோவையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தனியார் பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டார். நள்ளிரவு மதுரை திருமங்கலம் பகுதியில் வந்தபோது, பஸ்சில் மாணவிக்கு பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (58), பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். செல்போன் எண்ணைக் கேட்டும் மிரட்டியுள்ளார். நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அந்த மாணவி இறங்கியபோது, சுரேசும் மாணவியைப் பின்தொடர்ந்து இறங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மிரண்டு போன மாணவி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார், சுரேஷை பிடித்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். நாசரேத் அருகே வாழையடி முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(29). தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் நாசரேத் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் போதையில் பயணம் செய்துள்ளார். பஸ்சில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி அலறியதால் சக பயணிகள் அவரை பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமியின் பெற்றோர் புகாரின்படி சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வெங்கடேசை போக்சோவில் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் முகமது பாட்ஷா(32). இவர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் முகமது பாட்ஷாவை கைது செய்தனர்.

இரவில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை கட்டிப்பிடித்த ‘பெரிசு’
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்குசென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு தனியாக நடந்து சென்றபோது சின்னக்கள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை(63) என்பவர் பின்பக்கமாக சென்று திடீரென்று கட்டிப்பிடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத இளம்பெண் கூச்சலிட்டார். அப்போது அவ்வழியாக வந்த வடவாம்பலம் பாலாஜி(23), அஜய்(23) ஆகியோர் முதியவரை தட்டிக்கேட்டுள்ளனர். உடனே மேலும் 2 பேர் வந்து அந்த வாலிபர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

Related Stories: