திருவண்ணாமலை: மது குடித்துக்கொண்டிருந்த அண்ணனை, அவரது தம்பி அழைக்க வந்தபோது தகராறு ஏற்பட்டது. தகராறு முடிந்து அன்றிரவு தம்பி தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியபோது தூக்கி வீசி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் கொங்கு, விவசாயி. இவரது மகன்கள் ஆகாஷ்(25), துரை(23). இந்நிலையில் கடந்த 21ம்தேதி இரவு ஆகாஷ் பெருங்கொளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள காலி இடத்தில் குடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிவா(22), ராஜேஷ்(25), அசோக்(26) ஆகியோரும் மது வாங்கி வந்து ஆகாஷின் அருகே அமர்ந்து குடித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு வந்த துரை, தனது அண்ணன் ஆகாஷை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். போதையில் இருந்த சிவா, ராஜேஷ், அசோக் ஆகியோர், ‘நீ ஏன், அவனை கூப்பிடுகிறாய்’ எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய 3பேரும் சேர்ந்து துரையை சரமாரி தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற ஆகாஷையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து துரை, ஆகாஷை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவு 9.30 மணியளவில் சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய 3 பேரும் துரை வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசியுள்ளனர். அக்கம்பக்கத்தினர், அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தார்களாம்.
ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் 3 பேரும் மீண்டும் துரை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது துரை வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததாம். இதனால் 3 பேரும் பக்கத்து வீட்டின் மாடி படிக்கட்டு வழியாக ஏறி துரை வீட்டின் மொட்டை மாடிக்கு ெசன்றுள்ளனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த துரையை, 3 பேரும் சரமாரியாக தாக்கி மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதை பார்த்த 3பேரும் தப்பியோடிவிட்டனர்.
தலையில் பலத்த காயமடைந்த துரையை, தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துரையின் தந்தை கொங்கு தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய 3பேரையும் இன்று காலை கைது செய்தனர். பின்னர் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
