ஜலகண்டாபுரம்: சேலம் அருகே அக்காவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனாரை, தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு முருகன் (41), சின்னதிருப்பதி (39) என்ற 2 மகன்களும், முத்துபொன் என்ற மகளும் உள்ளனர். இவர்களில் இளையமகன் சின்னதிருப்பதிக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. மூத்தமகன் முருகனுக்கு, அதே ஊரைச் சேர்ந்த செல்வி என்பவருடன் திருமணமானது.
ஒரு மகன் உள்ளான். முருகன் அடிக்கடி கட்டிட வேலை செய்வதற்காக வெளியூர்களுக்கு சென்று விடுவார். இதனிடையே, சின்னதிருப்பதி சரிவர வேலைக்கு செல்லாமல், ஊர் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். தனது தாய் வீட்டிலும், அண்ணன் வீட்டிலும் சாப்பிட்டு கொண்டு வாழ்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, அண்ணியான செல்வியிடம் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்து வந்துள்ளார்.
மேலும், அவருக்கு பாலியல் தொந்தரவும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து, செல்வி தனது கணவர் முருகன், தம்பி சபரி (எ) மணிகண்டன் மற்றும் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், சின்னதிருப்பதி அண்ணன் முருகனின் வீட்டிற்கு சென்று, செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த செல்வி மற்றும் அவரது மகன் சத்தம் போட்டுள்ளனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். மேலும், செல்வியின் தம்பி சபரி வந்துள்ளார்.
அவர் சின்னதிருப்பதியை தனியாக இழுத்துச் சென்று, உன்னால் எனது அக்காவிற்கு பெரிய தொந்தரவாக இருக்கிறது எனக்கூறி தாக்கியுள்ளார். அப்போது அங்குள்ள பெரியாண்டிச்சி கோயில் சுவரில் சின்னதிருப்பதியின் தலையை பிடித்து இழுத்து மோதியுள்ளார். பின்னர் அங்கேயே அவரை போட்டு விட்டு, சபரி சென்று விட்டார்.
நேற்று அதிகாலை, கோயிலில் பேச்சு மூச்சின்றி கிடந்த சின்னதிருப்பதியை, அவரது தாய் கிருஷ்ணம்மாள் மற்றும் உறவினர்கள் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றனர். அங்கு பார்த்த போது, இரவில் நடந்த தகராறில், சபரி அடித்ததில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, சபரியை நேற்று மாலை கைது செய்தனர்.
