3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீடியோ எடுத்து மிரட்டல்

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியை நேற்று முன்தினம் மாலை, காட்டுப்பகுதிக்கு அதே ஊரைச்சேர்ந்த முருகன் என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியின் உறவுக்கார பெண் பின்தொடர்ந்து பார்த்தபோது, சிறுமியிடம் முருகன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த பெண் கூச்சலிடவே சிறுமியை விட்டுவிட்டு, முருகன் ஓட்டம் பிடித்தார்.

விசாரணையில் முருகன் மட்டுமின்றி மேலும் 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறியுள்ளார். இதுபற்றிய புகாரின்படி ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த முருகன் (40), ராஜேந்திரன் (45), கோவிந்தராஜ் (39), முதியவர் அங்கமுத்து (62) ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த 17 வயது சிறுவனுடன், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர். அப்போது, சிறுவன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு அதை வீடியோவும் எடுத்துள்ளார். பின்னர் சிறுமி விலக முடிவு செய்தபோது சிறுமியின் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டியுள்ளான். இதுபற்றி சிறுமி பெற்றோரிடம் கூறவே, அவர்கள் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, சிறுவனை கைது செய்து, செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர், வெள்ளையம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25), பனைமரம் ஏறும் தொழிலாளி, திருமணமாகாதவர். இவர், அந்தியூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீகாந்தை நேற்று கைது செய்தனர்.

Related Stories: