கொள்ளை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்; துப்பாக்கி முனையில் பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம்: 12 வயது மகனின் கண் முன் நடந்த பயங்கரம்

உஜ்ஜயினி: மத்திய பிரதேசத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் பழங்குடியினப் பெண்ணை அவரது மகன் முன்னிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தின் பட்நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் பழங்குடியின குடும்பத்தினர் பாதுகாவலர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 18ம் தேதி நள்ளிரவில் 30 வயதுடைய பெண், அவரது கணவர் மற்றும் 12 வயது மகன் ஆகியோர் பண்ணையில் உள்ள தற்காலிக குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், தூங்கிக் கொண்டிருந்த அவர்களை எழுப்பி, பெண்ணின் கணவரை துப்பாக்கி முனையில் மிரட்டி வெளியே இழுத்துச் சென்று தாக்கியது.

அந்த கும்பலில் இருந்த சிலர் அங்கிருந்த காற்றாலை மின்சார வயர்களை திருடிக்கொண்டிருந்த நிலையில், மற்றவர்கள் அந்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், அந்த கும்பல் தன்னையும் தனது 12 வயது மகனையும் அருகில் இருந்த புதருக்குள் இழுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். அங்கு ஒருவன் தனது மகன் முன்னிலையிலேயே துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தொடர்ந்து அவனது கூட்டாளிகள் 2 முதல் 3 பேர் தன்னை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிவித்தார்.

மேலும் சத்தம் போட்டால் மகனை கொன்றுவிடுவதாக துப்பாக்கி காட்டி மிரட்டியதால், அந்த சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அடையாளம் தெரியாத அந்த கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

Related Stories: