நாமக்கல் மாவட்டத்தில் 14 ரவுடிகள் அதிரடி கைது

 

நாமக்கல், மே 22: நாமக்கல் மாவட்டத்தில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கவும் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில், மாவட்டம் முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விக்னேஷ் (27) மற்றும் தமிழரசன் (32) ஆகியோர் மீது திருச்செங்கோட்டிலும், தீபக்ராஜ் (19), ஆகாஷ் (20) ஆகியோர் மீது குமாரபாளையம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் (எ) ரட்டு மணி (26), கார்த்திகேயன் (23), ஆகியோர் மீது வேலூரிலும், நித்தீஸ் என்பவர் மீது பரமத்தியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனை தொடர்பாக, இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் ஜித் (26), விக்னேஷ் (31), மோகன்ராஜ் (29) மற்றும் சரத்குமார் (31) ஆகியோர் மீது திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திலும், சவுந்தரராஜன் (37), அருண்குமார் (27) ஆகியோர் மீது நல்லிபாளையத்திலும், விஜயசாரதி என்பவர் மீது சேந்தமங்கலத்திலும் மற்றும் கிஷோர்குமார் என்பவர் மீது நல்லூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் 17 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனை மற்றும் ரவுடியிஷத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

Related Stories: