டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

 

குமாரபாளையம், மே 19: குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்தில் மூடுவதாக மண்டல அதிகாரி கடிதம் கொடுத்ததையடுத்து போராட்டம் திரும்ப பெறப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி, பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் டாஸ்மாக் கடை மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இங்கு மது குடிப்போர் மாலை நேரத்தில் சாலையில் அமர்ந்து குடிப்பதால், குடியிருப்பு பகுதிக்கு செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த டிஎஸ்பி கௌதம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நாமக்கல் டாஸ்மாக் மண்டல மேலாளர் கனகரத்தினம், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். உயர் அதிகாரிகளுடன் பேசி, ஒரு மாத காலத்திற்குள் அந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக உறுதியளித்து, பொதுமக்களிடம் கடிதம் எழுதி கொடுத்தார். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: