நாமக்கல், மே 22: எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில், ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பள்ளி பிளஸ் 2 தேர்விலும் கடைசி இடத்தை தான் பிடித்தது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. நாமக்கல் மாவட்டம், எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் 96 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், நாமக்கல் 15வது இடத்தை பிடித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 18,412 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இவர்களில் 17,677 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 4 பாடங்களில் 375 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். அறிவியல் பாடத்தில் – 216 பேரும், கணிதம் – 94, சமூக அறிவியல் – 63, ஆங்கிலத்தில் – 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும் 52 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதத்தில் கடைசி 10 இடங்களை கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டும் அரசு பள்ளிகளே பெற்றுள்ளன. அந்தபள்ளிகள் குறித்த பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தை பிடித்த ராசிபுரம் அண்ணாசலை அரசு மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 25 மாணவ, மாணவியர் தோல்வி அடைந்துள்ளனர். பள்ளி 75 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுக்கு முன் மிக பிரபலமான திகழ்ந்த இந்த அரசு பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மிக குறைந்த தேர்ச்சியே பெற்றுள்ளது.
காரைக்குறிச்சிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு 75.68 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 9 பேர் தேர்வில் பெயிலாகியுள்ளனர். எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு 77.55 சதவீத தேர்ச்சி பெற்று கடைசி 10 பள்ளிகள் பட்டியலில் வழக்கம் போல இடம் பிடித்துள்ளது. இந்த பள்ளியில், இந்த ஆண்டு 11 பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 79 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 10 மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். தேங்கல்பாளையம் காந்தி கல்விநிலையம் உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவர்கள் தோல்வி அடைந்ததால், தேர்ச்சி சதவீதம் 80 ஆகி விட்டது. பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 81 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 5 பேர் பெயிலாகியுள்ளனர்.
உலகப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 82 சதவீத தேர்ச்சியும், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 82.73 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன. ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி 83 சதவீத தேர்ச்சியும், சவுதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 84 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பள்ளிகள் ஆண்டுதோறும் கடைசி 10 பள்ளிகள் என்ற பட்டியலில் இடம் பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
