சேந்தமங்கலம், மே 20: எருமப்பட்டி வட்டாரத்தில், உழவர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்க வேளாண் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வட்டார வேளாண்மை, உழவர் நலத்துறை உதவி இயக்குநர் செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எருமப்பட்டி வட்டார விவசாயிகள், தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தகவல்களை ஒரே முறையும், சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகும். இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களின் விவரங்கள் துரிதநேரத்தில் பயன்பெற ஏதுவாக உழவர் அடையாள அட்டை வழங்கும் பணி, வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. உழவர் அடையாள அட்டை என்பது, ஆதார் மற்றும் நிலப்பட்டா விவரங்களின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளமாகும்.
இது மத்திய அரசின், அக்ரி ஸ்டாக் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், உழவர் அடையாள அட்டை இல்லாத விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் தங்களது விவரங்களை, வேளாண்மை துறை தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை சந்தித்து பதிவு செய்யலாம். அரசின் மானிய திட்டங்கள் பெறுவதற்கும், மானிய விவசாய கருவிகள் மற்றும் உரங்கள் பெறுவதற்கும் பயிர் காப்பீடு திட்டங்களை பெறுவதற்கும், இணையதளத்தில் தங்களது தகவல்களை பதிவு செய்து அடையாள அட்டை பெறுவது கட்டாயம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
