பள்ளிபாளையம், மே 20: பள்ளிபாளையத்தில் பாழடைந்த கட்டிடத்தில் அங்கீகாரமில்லாமல் தனியார் பள்ளி செயல்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கட்டிட உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளிபாளையம் ஜீவா ஷெட் அருகே சுமார் 40 வருடங்கள் முன் கட்டிய பாழடைந்த பழைய கட்டிடத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுவதாக, பள்ளி கட்டிட உரிமையாளர் ரமேஷ் புகார் செய்தார். அங்கீகாரமில்லாத இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் நிலை ஆபத்தாக உள்ளதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நாமக்கல் தனியார் பள்ளி சிஇஓ சாந்தி, குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் நேற்று மதியம் பள்ளிக்கு வந்தனர். புகார் தெரிவித்த பள்ளி கட்டிட உரிமையாளர், தனியார் பள்ளி தாளாளர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளி கட்டிடத்தின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியில் அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்த பெற்றோர் சிலர் பள்ளிக்கு வந்தனர். இப்பள்ளியில் கட்டணம் குறைவாக இருப்பதாகவும், குடியிருப்புகளுக்கு அருகாமையில் இருப்பதால் குழந்தைகளை அழைத்துச்செல்வது எளிதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். பள்ளியில் தற்போது சுமார் 150 குழந்தைகள் 5ம் வகுப்பு வரை படிப்பதாகவும், அலமேடு பகுதியில் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், அங்கு இந்த பள்ளியை இடமாற்றம் செய்யப்போவதாகவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், பள்ளி கட்டிடம் சேதமடைந்து இருப்பதால், குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு 6 மாதம் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும், அரசு அங்கீகாரம் பெற்று பள்ளியை நடத்த வேண்டும் என கல்வி அதிகாரி வலியுறுத்தினார்.
இதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, 6 மாத காலத்தில் வேறு கட்டிடத்திற்கு செல்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். அதிகாரிகளின் ஆய்வால் சுமார் 4 மணி நேரம் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
