நாமகிரிப்பேட்டை, மே 12: நாமகிரிப்பேட்டை அருகே காக்காவேரியில் துணிக்கடை பூட்டை உடைத்து நுழைந்து திருடிய வழக்கில் 3 மாதத்திற்கு பின் வாலிபரை போலீசார் கைது செய்தனர்
நாமகிரிப்பேட்டை அடுத்த காக்காவேரியில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துணிக்கடை ஒன்றின பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த விலை உயர்ந்த துணிகளை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர், நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு வழக்கு சம்பந்தமாக நாமகிரிப்பேட்டை போலீசார் தேடிவந்த நிலையில், வாலிபரை பிடித்து வந்து போலீஸ் ஸ்டேசனில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் சேலம் கிச்சிப்பாளையம், நாராயண நகரை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (எ) பல்லு மணிகண்டன்(29) என்பது தெரியவந்தது. இவர் காக்காவேரி பகுதியில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துணிக்கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
