முள்ளிமலை மகாலிங்கையா கோயிலில் பருவம் தவறாமல் மழை பெய்ய வேண்டி பூஜை

 

மஞ்சூர், மே 20: மஞ்சூர் அருகே மழைக்காக நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் 22 ஊர்களை சேர்ந்த படுகரின மக்கள் கலந்து கொண்டார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தை சீமை பகுதியில் படுகரின மக்கள் வசித்து வருகிறார்கள். பெரும்பாலும் தேயிலை விவசாயிகளாக உள்ளனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு துவக்கத்தில் இருந்தே போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வறட்சியின் தாக்கத்தால் தேயிலை, மலைகாய்கறி விவசாயம் கடுமையாக பாதித்தது. இதனால், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, குந்தா பகுதியில் மழை பெய்யவும், வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவும் வேண்டி படுகரின மக்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் பாரம்பரிய வழக்கப்படி தங்களது கிராமங்களில் உள்ள கோயில்கள் மற்றும் நீர் நிலைகளில் ‘அரக்கை’ என்னும் சடங்கு மற்றும் சிறப்பு வழிபாடுகளை கடந்த சில தினங்களாக நடத்தி வருகிறார்கள். இறுதியாக மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை மகாலிங்கையா சுவாமி கோயிலில் மழைக்காக ‘அரக்கை’ மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Related Stories: