ஊட்டி,மே18: ஊட்டியில் மங்குஸ்தான் பழ விற்பனை துவங்கியுள்ளது. ஊட்டியில் பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான் நீலகிரி மாவட்டத்தின் பர்லியார் மற்றும் கல்லாறு அரசுப் பண்ணைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. குற்றாலம், கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவற்றின் விளைச்சல் உள்ளது. மங்குஸ்தான் பழத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. வைட்டமின் பி1, பி2, பி9, வைட்டமின் சி, மெக்னீசியம், காப்பர் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பழங்களை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்கின்றனர். இந்நிலையில் ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து மங்குஸ்தான் பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
