ஆஸ்லோ: ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நெதர்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் நார்வே சென்றார். தலைநகர் ஆஸ்லோவில் நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் மற்றும் பிரதமர் மோடியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடன் நார்வேயை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் என்பவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி அங்கிருந்து உடனடியாக வெளியேறிய சம்பவம் உலகம் முழுவதும் விவாதப்பொருளாக மாறி உள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஹெல்லே லிங் ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,’ உலகில் பத்திரிகை சுதந்திரத்தில் நார்வே நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியா 157 வது இடத்தில் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில்,’ உலகின் சுதந்திரமான பத்திரிகைதுறையிடம் இருந்து சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்துவிட்டு செல்லலாமே’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் பிரதமர் மோடி உடனடியாக அந்த அரங்கில் இருந்து வெளியேறி செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது. இதை தொடர்ந்து நார்வே பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பதில் அளித்தனர்.
* ராகுல்காந்தி கேள்வி
நார்வேயில் பெண் பத்திரிகையாளரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்காமல் சென்றது குறித்து தனது எக்ஸ் தளத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறுகையில்,’ மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பிரதமர் மோடி சில கேள்விகளுக்காக பீதியடைந்து ஓடுவதை பார்க்கும் போது இந்தியாவின் மதிப்பு என்ன ஆவது’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
