ஆஸ்லோ: நார்வேயில் நடந்த நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் பிரதமர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 5 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன்,நார்வே,இத்தாலி நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுள்ளார். ஸ்வீடன் பயணத்தை முடித்து கொண்டு நேற்றுமுன்தினம் நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு சென்றார்.ஆஸ்லோவில் பிரதமருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் ஆஸ்லோவில் இந்தியா-நார்டிக் நாடுகளின் 3வது உச்சி மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரன் பிராஸ்டாடோடிர், பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஆர்போ,டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்ஸன் ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின் போது வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.
ஐந்து நார்டிக் நாடுகளும் இணைந்து 1.9 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளன. மேலும் அவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான கடல்சார் நிர்வாகத்தில் உலகளவில் முன்னணி வகிக்கின்றன. நார்வேயில் இருந்து தனது வெளிநாட்டு பயணத்தின் இறுதிக்கட்டமாக மோடி நேற்று இரவு இத்தாலிக்குச் சென்றார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள மோடி இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து மெலோனியுடன் ஆலோசனை நடத்துகிறார்.
