லண்டன்: 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் துஷார் குமார் இங்கிலாந்தில் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த துஷார் குமார்(23) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றவர். தொழிலாளர் கட்சியை சேர்ந்த துஷார் குமார், கடந்த 2023ம் ஆண்டில் தனது 20வது வயதில் இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் பகுதியில் உள்ள எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் டவுன் நகரங்களின் கவுன்சிலராகவும், பின்னர் துணை மேயராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் துஷார் குமார் தற்போது எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் டவுன் நகரங்களின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ம் தேதி போர்ஹாம்வுட்டில் உள்ள ஃபார்வே ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் துஷார் குமார் மேயராக பதவி ஏற்று கொண்டார். இதன் மூலம் ஐக்கிய அரசின் வரலாற்றில் மிக இளவயது இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை துஷார் குமார் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து துஷார் குமார் கூறுகையில், “நான் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் டவுன் நகரங்களின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய கவுரவம். இந்த பயணம் உண்மையிலேயே ஒரு கனவு போல் தெரிகிறது.
என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். என் மேயர் பதவி காலத்தில், சமூக மேம்பாடு, உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் அதிக இளைஞர்களை பொதுசேவையில் ஈடுபட ஊக்குவிப்பது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவேன்” என்றார்.
