சான் டியாகோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய மையமான சான் டியாகோ மசூதி வளாகத்தில், நேற்று முன்தினம் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. மசூதி மற்றும் அங்கு இயங்கி வரும் பள்ளி வளாகத்திற்கு வெளியே திடீரென புகுந்த 2 சிறுவர்கள் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் உட்பட 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். தாக்குதல் நடந்தபோது பள்ளி வளாகத்திற்குள் ஏராளமான குழந்தைகளும் மாணவர்களும் இருந்ததால் அங்கு பெரும் பதற்றமும் அலறல் சத்தமும் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தைகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர சோதனையில், மசூதி அருகில் இருந்த ஒரு காரில் இரண்டு இளைஞர்கள் பிணமாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரும் தங்களைத்தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருந்தனர். இவர்கள்தான் மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். . தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
