ஈரான் மீது நாளை முதல் நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன்: ஈரான் மீது நாளை முதல் நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தியது.

சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வளைகுடா போர் சுமார் 40 நாட்கள் நீடித்தது. பின்னர் இருதரப்பும் கடந்த மாதம் 8-ந்தேதி தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்தன. அது தற்போது வரை அமலில் இருக்கிறது. இந்த போர் ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் சுமார் 6 ஆயிரம் பேரை பலி கொண்டது. தற்போது வளைகுடா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் பதற்றம் ஓயவில்லை.

ஈரானின் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டு இருப்பதாலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதாலும் அங்கே முழுமையான அமைதி ஏற்படவில்லை. மறுபுறம் ஈரான்-அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதிலும் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் மீண்டும் போர் மூளலாம் என்ற அச்சம் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி சர்வதேச நாடுகள் மத்தியிலும் நிலவி வருகிறது.

இதை மேலும் அதிகரிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், நேற்று முன்தினம் தனது சமூக வலைத் தளத்தில் மறைமுக மிரட்டல் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , சவுதி அரேபியா தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது நாளை நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட தீவிர பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், இருப்பினும் அது தோல்வியடைந்தால் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முழு தயார் நிலையில் இருப்பதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிறுத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவரங்களை அதிபர் டிரம்ப் தெரிவிக்கவில்லை. ஆனால் “ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில், ஈரான் மீது ஒரு முழுமையான, பெரிய அளவிலான தாக்குதலை உடனடியாக தொடுக்க தயாராக இருக்குமாறு” அமெரிக்க ராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக டிரம்ப் கூறினார்.

Related Stories: