சூலூர் அருகே மது போதையில் தாயை தரக்குறைவாக பேசியதால் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: நண்பர் போலீசில் சரண்

 

​சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே நீலாம்பூர் ஆச்சான்குளத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மீன் பிடிப்பதற்காக வலையை குளத்தில் போடுவதற்கு மீனவர் முருகன் வந்துள்ளார். அப்போது குளக்கரை மேட்டில் வாலிபர்கள் ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அவரது தகவலின்பேரில் போலீசார் அங்கு வந்து தேடிப்பார்த்து விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலையில் குளத்தில் மீன் பிடிக்க விரித்திருந்த வலையை எடுப்பதற்காக மீனவர் முருகன் வந்தபோது வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார். இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் கோகுல் (23) நேற்று மாலை நீலாம்பூர் காவல் நிலையம் வந்து சரணடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோகுலுடன் அதே ஊரை சேர்ந்த ஹரிஷ் (29), அரியலூரை சேர்ந்த சரவணன் ஆகியோர் அத்தப்பகவுண்டன் புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்துள்ளனர். நண்பர்களான மூவரும் நேற்று முன்தினம் இரவு ஆச்சான் குளக்கரையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது சரவணன், கோகுலின் தாயாரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கோகுலும், ஹரிசும் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கி கொன்றது தெரியவந்தது.

Related Stories: