கோவை: பெங்களூரில் பயிற்சி பெற்று கோவையில் வீட்டிலேயே கள்ள நோட்டை தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை சுந்தராபுரம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பிள்ளையார் புரம் செக்போஸ்ட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை தடுத்து சோதனையிட்டதில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த வாலிபர் கரும்புக்கடை சாரமேடு ரோடு வள்ளால் நகரை சேர்ந்த சதாம் உசைன் (28) என்பது தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ரூ.36,800 இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அவர், கோவை குண்டு வெடிப்பு கைதி போத்தனூர் கார்மெல் நகரை சேர்ந்த பைசல் (37) மற்றும் கரும்புக்கடை பிஸ்மி நகரை சேர்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் சிக்கிய அக்கீம் என்கிற காஜா மொய்தீன் (38) ஆகியோருடன் சேர்ந்து கள்ள நோட்டு தயாரித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சதாம் உசைன் நர்சரி வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு பைசல் மற்றும் காஜா மொய்தீன் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அப்போது 3 பேரும் சேர்ந்து போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே பைசல் பெங்களூரில் கடந்த 2021ல் பணி செய்த போது கள்ள நோட்டு தயாரிக்க பயிற்சி பெற்றிருப்பதாகவும், இங்கும் கள்ள நோட்டு தயாரிக்கலாம் என கூறியுள்ளார். காஜா மொய்தீன் காந்திபுரத்தில் இயந்திரம் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து மெத்தபெட்டமைன் வாங்க நவுபல் மற்றும் தாரிக் என்பவர்கள் உதவியதாக தெரிவித்துள்ளனர். அவர்களை தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், பைக், மெத்தபெட்டமைன் 2 கிராம், ரூ.36,800 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
