ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே படப்பை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (24). இவர், தனது நண்பர்கள் சிலருடன் துக்க வீடுகளில் தாரை, தப்பட்டை அடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தனது நண்பர்களுடன் ஊர்ஊராக சென்று கானா கச்சேரி நடத்தி வந்துள்ளார். இதில், தாம்பரம் அருகே வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பரத்குமார் (24), சீனிவாசன் (23) ஆகிய இருவரும் லோகேஷுடன் சேர்ந்து கானா கச்சேரிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காகவே வரதராஜபுரத்தில் இருந்து அம்மணம்பாக்கத்தில் உள்ள லோகேஷின் வீட்டில் பரத்குமாரும் சீனிவாசனும் நீண்ட நாட்களாக தங்கியுள்ளனர். இவர்களுடன் அந்த வீட்டில் லோகேஷின் பெற்றோரும் வசித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தனித்து காணப்படும் லோகேஷின் வீட்டுக்கு நேற்று காலை இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடி 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கைகளில் கத்தி உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளது. இவர்களை பார்த்து அதிர்ச்சியான லோகேஷ், வீட்டிலிருந்து வெளியேறி தப்பியோடிவிட்டார். வீட்டில் இருந்த லோகேஷின் பெற்றோர் மர்ம கும்பலை பார்த்ததும் அலறி கூச்சலிட்டனர். இதில் ஆத்திரமான மர்ம கும்பலை சேர்ந்த 2 பேர், அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் அக்கும்பலில் இருந்த 4 பேரும் வீட்டுக்குள் இருந்த பரத்குமார் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோடிவிட்டனர். மர்ம கும்பலின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பரத்குமார், சீனிவாசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் படப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்து போன பரத்குமார், சீனிவாசன் ஆகிய 2 பேரின் சடலங்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் படப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கொலையான பரத்குமார், சீனிவாசன் ஆகிய இருவரும் சம்பவத்தன்று வழக்கம் போல் கானா கச்சேரி முடிந்து லோகேஷின் வீட்டுக்குத் திரும்பி கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் மர்ம கும்பல் சரமாரி கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் அக்கம்பக்கத்தினரிடம் சரிவர பேசாமல் இருந்திருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் எதற்காக வரதராஜபுரத்தில் இருந்து இங்கு வந்து லோகேஷின் வீட்டில் தங்கியுள்ளனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விசாரணைகளின்போது, பல்லாவரம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கொலையான பரத்குமாருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அதுதொடர்பாக ஏற்கெனவே கொலையானவர்களின் கூட்டாளிகள் பரத்குமாரின் நடமாட்டத்தை கண்காணித்து, சம்பவ நாளன்று அவரை அதேபோல் பழிக்கு பழியாக வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்திருக்கலாம். இதை தடுக்க வந்த சீனிவாசனையும் மர்ம கும்பல் சரமாரி தாக்கியுள்ளது. இதில் இருவரும் பலியாகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் அதிகளவு கஞ்சா நடமாட்டம் இருப்பதால், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலுடன் பரத்குமார், சீனிவாசன் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.
