கோபி: பள்ளி மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய ஒர்க்ஷாப் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியின் 15 வயது மகள் 10 வது படித்து வருகிறார். சிறுமியின் பாட்டி சிறுவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவரை கவனித்துக்கொள்ள கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறுமி பாட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது சிறுமியின் தந்தையின் நண்பரான கொளப்பலூரை சேர்ந்த ஒர்க்ஷாப் தொழிலாளி மணி(50) என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பமாகவே, இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மணி மிரட்டியுள்ளார்.
இதனால் பாலியல் வன்கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து உள்ளார். இந்நிலையில் சிறுமி 8 மாத கர்ப்பிணியாகவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் விசாரணை செய்த போது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் தேவகி அளித்த புகாரின் அடிப்படையில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
