வீட்டுக்குள் புகுந்து 2 வாலிபர்கள் வெட்டி கொலை: படப்பை அருகே பயங்கரம்: 6 பேர் கும்பலுக்கு வலை

சென்னை: படப்பை அடுகே கஞ்சா போதையில் இருந்த 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அருகே உள்ள படப்பை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (24). இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து துக்க வீடுகளில் தாரை, தப்பட்டை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர்கள் ஊர்ஊராக சென்று கானா கச்சேரியும் நடத்தி வந்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (24) மற்றும் சீனிவாசன் (23) ஆகிய இருவரும் லோகோஷின் நண்பர்கள். இவர்களும் கானா கச்சேரிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காகவே வரதராஜபுரத்தில் இருந்து அம்மணம்பாக்கத்தில் உள்ள லோகேஷின் வீட்டிற்கு வந்து அவருடன் பரத்குமார் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் கடந்த பல நாட்களாக வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் லோகேஷின் தாய், தந்தையும் அந்த வீட்டில் இருந்துள்ளனர். லோகேஷின் வீடு, அப்பகுதியில் தனியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை லோகேஷின் வீட்டிற்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. அவர்களது கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவர்களை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த லோகேஷ், பதற்றம் அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி தலைதெறிக்க ஓடிவிட்டார். அவரது பெற்றோர் மர்ம நபர்களை பார்த்து கூச்சலிட்டனர். உடனே அந்த கும்பலில் இருந்த 2 பேர் லோகேஷின் தாய் மற்றும் தந்தை ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்தனர். கூச்சலிட்டால் உங்களை கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.

பின்னர், அந்த கும்பலில் இருந்த மற்ற 4 பேர் பரத்குமார் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரை நோக்கி பாய்ந்தனர். இதில் சீனிவாசனை வீட்டுக்குளேயே சரமாரியாக வெட்டினர். அப்போது பரத்குமார் பதறி ஓட முயன்றார். அவரையும் விரட்டிச்சென்று வீட்டுக்குள்ளேயே வெட்டிச் சாய்த்தனர். வாலிபர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் படப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

வாலிபர்களின் உடல்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து படப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வழக்கம்போல் கானா கச்சேரிக்கு சென்றுவிட்டு, லோகேஷின் வீட்டுக்கு வந்துள்ளனர். கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வீட்டுக்கு ஹெல்மெட்டுடன் பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், லோகேஷின் வீட்டில் இருந்த 2 பேரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது என்பது விசாரணையில் தெரிந்தது.

கொலை குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, இறந்த வாலிபர்கள் இருவரும் அக்கம் பக்கத்தினரிடம் அதிகம் பேசாமல் இருந்தது தெரிய வந்தது. மேலும் வரதராஜபுரத்தில் இருந்து இவர்கள் எதற்காக லோகேஷின் வீட்டில் தங்கியிருந்து தொழில் செய்தனர் என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்காக லோகேஷின் பெற்றோரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, 2 பேரையும் வெட்டி கொலை செய்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்தும், தலைமறைவான லோகேஷ் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையான 2 பேரும் கஞ்சா போதையில் இருந்ததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனரா, அதனால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மேலும் இருவர் மீதும் ஏதேனும் குற்றப் பின்னணிகள் உள்ளதா என்றும் படப்பை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த இரட்டை கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: