கோவில்பட்டி: காதல் விவகாரத்தில் காதலியின் கண்முன் இளைஞர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காதலியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சஞ்சய் (18). சென்னையில் சிற்ப கலைஞராக வேலை பார்த்து வந்தார். இவரும், கோவில்பட்டி அடுத்த கெச்சிலாபுரத்தை சேர்ந்த உறவினர் குமார் மகள் கனகலெட்சுமியும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தனர். இதையறிந்த குமார் மற்றும் அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் கனகலெட்சுமியிடம், ‘சஞ்சய், கோவில்பட்டி பஸ் நிலையம் வந்திருக்கிறார், அவரை சந்தித்து பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்’ என்று கூறி அவரை அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கனகலெட்சுமியும் தனது தந்தை குமார் மற்றும் உறவினர்களுடன் கோவில்பட்டி பஸ்நிலையம் சென்றுள்ளார். அங்கு பஸ்சுக்காக நண்பர்களுடன் காத்திருந்த சஞ்சயிடம் குமார் மற்றும் அவரது உறவினர்கள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவர்கள், கனகலெட்சுமியின் கண் முன்னே சஞ்சய்யை கத்தியால் குத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் அவரது நண்பர்கள் பஸ் நிலையத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் குமார் மற்றும் உறவினர்கள் விடாமல் துரத்திச் சென்று சஞ்சயை பிடித்து கழுத்து மற்றும் சில இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினர். உடன் வந்த மாரிமுத்துக்கும் காயம் ஏற்பட்டது.
பஸ் நிலையத்தில் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் வெளியூர் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவலறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்திக்குத்தில் காயமடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்துவை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சஞ்சய், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நள்ளிரவில் உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிந்து காதலியின் தந்தை குமார், உறவினர்கள் சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர். மாரிமுத்துவிற்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காதலி கண்முன்னே காதலன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
