சங்கராபுரம், மே 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் மனைவி சித்ரா(52) தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மரக்கன்றுகளை எடுக்க நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர், திடீரென சித்ராவின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் மர்ம ஆசாமி தப்பி சென்று விட்டான். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடபொன்பரப்பி போலீசார், பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை நடத்தி, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமி ஒருவன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
