திட்டக்குடி, ஏப். 22: திட்டக்குடி அருகே வேனும், பைக்கும் மோதிக் கொண்டதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். திட்டக்குடியில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் புலிவலம் கிராமம் அருகே நேற்று மாலை பைக்கும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பைக்கில் வந்த விருத்தாசலம் தாலுகா பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் ஆசைத்தம்பி(20) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த திட்டக்குடி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குமார் மகன் விக்ரம் (19) என்பவரை, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
