வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை

சங்கராபுரம், மே 1: வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை(28). இவரது கணவர் ராஜா, குவைத் நாட்டில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலை கடந்த 27ம் தேதி கிராமத்தில் மகளிர் குழுக்களுடன் சேர்ந்து கோடை சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்றுவிட்டு நேற்று அதிகாலையில் வளையாம்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பீரோவை பார்த்துள்ளார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 17 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து சங்கராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க விவசாய நிலப் பகுதியிலிருந்து காம்பவுண்ட் சுவரின் வழியாக ஏறி குதித்து, பூட்டை உடைக்கும் போது சத்தம் வராமல் இருக்க பூட்டில் ஈரத் துணியை சுற்றி பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: