நெல்லிக்குப்பம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி

 

நெல்லிக்குப்பம், மே 7: நெல்லிக்குப்பம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பத்திரக்கோட்டை ஆராய்ச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். அரசு பேருந்து நடத்துனர். இவரது மகள் பிரதிஷா (17), இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதி உள்ளார். பிரதிஷாவின் அண்ணன் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அண்ணனைப் போல தாமும் நன்கு படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டராக வரவேண்டும் என ஆசைப்பட்ட பிரிதிஷா நன்கு படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வில் பிரதிஷா கலந்துகொண்டு தேர்வு எழுதி உள்ளார். அதன் கீ மதிப்பெண்கள் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நீட் தேர்வில் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து விட்டால் வீட்டில் திட்டுவார்கள் என எண்ணி பிரதிஷா வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட பெற்றோர்கள் உடனடியாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அங்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரியவருகிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என அச்சத்தில் மாணவி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: