விழுப்புரம், மே. 5: விழுப்புரம் மாவட்டம் வானூர் தனி தொகுதி உலகப்புகழ் பெற்ற தொகுதியாக உள்ளது. ஆரோவில் சர்வதேச நகரம், பிரசித்திபெற்ற வக்ரகாளியம்மன் கோயில் என சுற்றுலா, ஆன்மீகத்திலும், கல்குவாரிகள் என தொழில் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கிய தொகுதியாக இருந்தது. இந்த தொகுதியில் இதுவரை நடந்த 14 சட்டமன்ற தேர்தலில் தலா 7 முறை திமுக, அதிமுக வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு முதல் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றிபெற்று 25 ஆண்டுகளாக தன்வசப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று அதிமுகவின் கோட்டையை தகர்த்துள்ளது. இந்த முறை அதிமுக வேட்பாளராக கூட்டணி கட்சிகளுடனான பாமக, பாஜ, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பாடகர் முருகனும், திமுகவில் விசிக, இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கூட்டணிகட்சி பலமுடன் வேட்பாளராக திராவிடமணிகொளதம் களமிறக்கப்பட்டனர்.
இந்நிலையில் 25 ஆண்டுகால அதிமுக வசம் இருந்த தொகுதியை கைப்பற்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரைப்படி மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார்.
இதனிடையே இந்த தொகுதிக்கு மினிடைடில்பார்க், கண்டமங்கலத்தில் தீயணைப்பு நிலையில் என இந்த தொகுதிக்கு தமிழகஅரசு பலசாதனை திட்டங்களை செய்து கொடுத்ததை மக்களிடையே கொண்டு சென்று தேர்தல் பிரசாரமும், திமுகவினர், கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைந்து நடைபெற்ற தேர்தல் பிரசாரம் தற்போது வெற்றிக்கு கைகொடுத்துள்ளது. இதனால் 25 ஆண்டுகாலம் தன்வசம் இருந்த அதிமுகவின் கோட்டையை திமுக கைப்பற்றியுள்ளது. இதனால் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்ட லட்சுமணன் எம்எல்ஏ அவருக்குட்பட்ட விழுப்புரம், வானூர் 2 தொகுதிகளையும் வெற்றிபெற்றுள்ளதால் கட்சி தலைமையில் அவர்மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
