குடியிருப்புகளுக்கு மத்தியில் பாசிகள் படர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் கிளாப்பாக்கம் குளம்: சீரமைத்து தடுப்புவேலி அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: கிளாப்பாக்கம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாசிகள் படர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் குளத்தை தூர்வாரி சீரமைத்து, தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளாப்பாக்கம் கிராமம், தாந்தோணியம்மன் கோயில் அருகே பழமையான கோயில் குளம் உள்ளது. இக்குளத்திற்கு மிக அருகாமையில் குடியிருப்புகளும், அங்கன்வாடி மையமும், எதிரில் தேவாலயமும் உள்ளது.

இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் குளத்தில் தேங்கியுள்ள நீர் மாசடைந்து காணப்படுகிறது. இதுமட்டுமின்றி, குளத்தைச் சுற்றிலும் முறையான சுற்று சுவரோ, முள் வேலியோ அமைக்கப்படாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால் குளத்தின் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். மேலும், குளத்தின் அருகாமையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருவதால், மையத்திற்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பற்ற சூழலில் வந்து செல்கின்றனர்.

முறையான பராமரிப்பில்லாததால் குளத்திலிருந்து பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, மாசடைந்த நிலையில் காணப்படும் கோயில் குளத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிப்பதுடன், குளத்தின் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள், தேவாலயத்திற்கு வருகின்றவர்கள் என அனைத்து தரப்பினரின் நலன் கருதி, குளத்தைச் சுற்றி சுற்று சுவரோ அல்லது தடுப்புவேலி அமைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: