மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரை பௌர்ணமி விழா இன்றும், நாளையும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு சித்தர்பீட வளாகம் முழுவதும் 1008 வேள்வி, யாக குண்டங்கள் அமைப்பதற்கான குருபூஜை கடந்த 21ம்தேதி நடைபெற்றது. இதில், ஆன்மிக இயக்க இணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் மத்திய வேள்வி குழு நிர்வாகி கோபு ஆகியோர் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த செவ்வாடை பக்தர்கள், சித்தர்பீட வளாகம் முழுவதும் சூலம், இரட்டைத்தலை நாகம், சதுரம், செவ்வகம், டைமண்ட் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களுடன் 1008 வேள்வி, யாக குண்டங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க தொடங்கிய நிகழ்ச்சியில், குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடி களாரின் திருவுருவ சிலைக்கும், கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 9 மணி அளவில் குருபீடம் சென்ற ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பி.எஸ்.வாசன், ஆர்.ஜெயராமன், எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட வழிப்பாட்டு மன்ற நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ஆன்மிக இயக்க தலைவி லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் கோ.ப.செந்தில் குமார் ஆகியோர் குருபீடம் சென்று, ஆன்மிக குரு பங்காரு சித்தரின் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை ஆன்மிக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார். சித்திரை பௌர்ணமி தினமான நாளை காலை கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள ஆன்மீக குரு பங்காரு சித்தர் திருஉருவ சிலைக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற உள்ளது.
மதியம் 1 மணியளவில் ஆதிபராசக்தி சித்தர்பீட வளாகத்தில் உலக நன்மைக்காக 1008 மாபெரும் யாககுண்ட வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க தலைவர்கள் கோ.ப.அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து கலசவிளக்கு வழங்குதல் நிகழ்ச்சியை ஆன்மீக இயக்க துணை தலைவர் உமாதேவி ஜெய்கணேஷ் வழங்கி தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், வெளிநாடு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட ஆன்மிக இயக்க நிர்வாகிகள் பி.எஸ்.வாசன், ஆர்.ஜெயராமன், தீபன், மகேந்திரன், வேப்பஞ்சேரி சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சக்தி பீடம் மற்றும் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
