வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணி; 234 தொகுதிகளுக்கும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்: தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

 

சென்னை: வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணிக்காக 234 தொகுதிகளுக்கும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஏற்கனவே எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவடைந்த நிலையில், மே 4ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும், 75,000க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு, 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் இணைந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முழுமையாக மூடப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்க வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் தொடங்கும். அதன் பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று முடிவுகள் காலை 9 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான மேஜைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், பெரிய தொகுதிகளில் கூடுதல் மேஜைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 234 அதிகாரிகள், தங்களுக்கான தொகுதிகளில் மே 2ம் தேதிக்குள் சென்று பணியில் பொறுப்பேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு கட்ட முடிவுகளும் இந்த பார்வையாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதேபோல், எந்தவித அவசர நிலை ஏற்பட்டாலும், அந்தந்த பார்வையாளர்கள் வழிகாட்டுதல் வழங்குவார்கள். இறுதி முடிவுகளும் அவர்களின் கையொப்பத்திற்குப் பிறகே வெளியிடப்படும். அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான பணியாளர்களுக்கும் தனிப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் மற்றும் இயந்திர வாக்குகளை சரியாக எண்ணும் முறைகள், வாக்கு எண்ணும் போது பராமரிக்கப்படும் படிவங்களான 18, 20, 21இ மற்றும் 21 சி, படிவம் 22 உள்ளிட்ட 15 படிவங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாள் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறுவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

Related Stories: