சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் பறக்கும் ரயில் – சென்னை மெட்ரோ இணைப்பு குறித்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்துவது குறித்து நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், இதற்காகத் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தெற்கு ரயில்வே தற்போது டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.
ரயில்வே வாரியத்திடம் இருந்து இந்த ஒப்பந்தத்திற்கு இன்னும் சில வாரங்களில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்புதல் கிடைத்துவிட்டால் சென்னை மெட்ரோ மற்றும் தெற்கு ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ நிர்வாகம் முறைப்படி கையகப்படுத்தும் பணிகள் உடனடியாகத் தொடங்கும்.
மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்திய பிறகு, பறக்கும் ரயில் சேவையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது பொலிவிழந்து காணப்படும் பறக்கும் ரயில் நிலையங்கள், சென்னை மெட்ரோவின் தரத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்படும். நிலையங்களின் தூய்மை, மின்விளக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் வரும்.பயணிகள் மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில் இரண்டிலும் தடையின்றி பயணம் செய்ய ‘ஒரே டிக்கெட்’ அல்லது ‘ஸ்மார்ட் கார்டு’ முறை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்.
முதற்கட்டமாக நிலையங்கள் மற்றும் நிர்வாகம் மாற்றப்பட்டாலும், படிப்படியாக ரயில் பெட்டிகளையும் மெட்ரோ தரத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் சென்னை கடற்கரை வழித்தடத்தில் பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகள் பெரும் பயனடைவார்கள். ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மெட்ரோ ரயில்களைப் போலவே இதிலும் பயண நேரக் குறைப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.சென்னை மாநகரின் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துச் சங்கிலியில், இந்த இணைப்பு ஒரு புரட்சிகரமான மாற்றமாக அமையும்.
