பூந்தமல்லி, ஏப்.29: போருர் சுங்கச்சாவடியில் சாலையை கடந்த போது, சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது தாய் மற்றும் 5 மாத குழந்தை படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(30). இவரது மனைவி குளோரி(28). இவர்களது மகன் ரியான் பெலிக்ஸ்(4). இவர்கள், தங்களது உறவினரான திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கிருபா, ஜெர்லீன், டேனியல் ஆகியோருடன் வாக்கு செலுத்துவதற்காக சிவகங்கை சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினர்.
போருர் அருகே சுங்கச் சாவடியில் பேருந்தில் இருந்து இறங்கி, சாலையை கடந்த போது கோயம்பேட்டில் இருந்து பூக்கள் ஏற்றிக் கொண்டு தாம்பரம் நோக்கி சென்ற சரக்கு வேன், இவர்கள் மீது மோதியது. இதில் குளோரி, அவரது மகன் ரியான் பெலிக்ஸ் மற்றும் குளோரி சகோதரியின் 5 மாத கைக்குழந்தை ஜீவன் புவனேஷ் ஆகிய மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இதில் பின்னால் வந்த கிருபா, ஜெர்லின், டேனியல் ஆகியோர் நூலிழையில் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், படுகாயமடைந்த மூவரையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவன் ரியான் பெலிக்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். குளோரி மற்றும் ஜீவன் புவனேஷ் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சிதம்பரம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
