திருத்தணி, ஏப்.25: திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 21ம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், 4ம் நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை முருகப்பெருமான் பல்லக்கு சேவையில் எழுந்தருளி மாடவீதியுலா நடைபெற்றது. மாலை வெள்ளி நாக வாகனத்தில் வள்ளி-தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க வெள்ளி நாக வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் தீபாராதனை செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சித்திரை பெருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் முருகன் மாலை அணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
