திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 160 வேட்பாளர்கள் போட்டி

திருவள்ளூர், ஏப்.23: திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் பிரதான வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 160 போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் 15,44,710 நபர்களும், பெண் வாக்காளர்கள் 16,12,090 நபர்களும் மற்றும் 3ம் பாலினத்தவர்கள் 613 நபர்களும் என மொத்தம் 31,57,413 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 160 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதாவது கும்மிடிப்பூண்டி – 15, பொன்னேரி – 13, திருத்தணி – 13, திருவள்ளூர் – 14, பூந்தமல்லி – 11, ஆவடி – 20, அம்பத்தூர் – 23, மதுரவாயல் – 21, மாதவரம் – 15, திருவொற்றியூர் – 15 என மொத்தம் 160 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் அம்பத்தூர், மதுரவாயல் மற்றும் ஆவடி ஆகிய தொகுதிகளில் 20 முதல் 23 வேட்பாளர்களும், மீதமுள்ள 7 தொகுதிகளில் 11 முதல் 15 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள், நோட்டாவும் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக சேர்த்து அந்தந்த பகுதியில் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் 4005 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் 8663 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 6240 கண்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 5968 வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செய்யும் இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருவள்ளுரில் உள்ள செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 335 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கபட்டது.

அதனை திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் மேற்பார்வையில் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்து லாரிகள் மூலமாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு சென்றனர். திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 19,224 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க 2 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் என 4 சட்டபேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்களும், பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக கொண்டு சென்று வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் இந்த 2 மையங்களிலும் 24 மணி நேரமும் பாதுகாக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Related Stories: